சென்னை: நான்கு ஆண்டுகளாக BC, MBC மாணவர்களுக்கு பாஜக அரசு இழைத்த அநீதிக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், சமூகநீதி வீழ்த்தப்படும் போதெல்லாம் தமிழகமே ஓரணியில் நிற்கும் என்றும், மேல்முறையீடு தவிர்த்து உடனே இடஒதுக்கீடு வழங்குக எனவும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது, இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ இடங்களில் பிற்படுத்தப்பட்ட(பி.சி, எம்.பி.சி) சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உரிமை உண்டு என்று திமுக தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நான்கு வருடங்களாக இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மத்தியில் உள்ள பாஜக அரசு நிராகரித்து வந்திருக்கிறது. திமுக சார்பில் எம்.பி. வில்சன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார், நேரில் மனு அளித்தார், கழக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள்.