திருமண ஆசைக் காட்டி 14 வயது சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!: போலீசார் நடவடிக்கை..!!

திருப்பூர்: திருமண ஆசைக் காட்டி 14 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞரை திருப்பூர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியை சேர்ந்த பிரபு என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வேலை பார்த்து வந்த பிரபு, வீட்டின் அருகில் உள்ள 14 வயது சிறுமியை கடந்த 9 மாதங்களாக காதலிப்பதாக கூறி ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரியவந்ததும்,  இரண்டு நாட்கள் முன்பு அந்த சிறுமியிடம் திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பிரபு தர்மபுரிக்கு அழைத்து சென்றுவிட்டார்.  இந்நிலையில் பூண்டி காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என அந்த சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். தொடர்ந்து, பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் தர்மபுரிக்கு சென்று சிறுமியை மீட்ட திருப்பூர் போலீசார் பிரபுவையும் அதிரடியாக கைது செய்தனர்.

இதையடுத்து திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு  எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டாலே இத்தகைய குற்றங்கள் ஒழியும்.

Related Stories: