துறையூர்: துறையூர் அருகே நாகமநாயக்கம்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 149 ஏக்கர். இந்த ஏரியை நம்பி 5 கிராமங்களில் உள்ள சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த ஏரி தூர்வாரப்பட்டு 60 வருடங்களுக்கு மேல் ஆகிறது. தற்போது இந்த ஏரி போதுமான ஆழமின்றி குறைந்தஅளவே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏரியை தூர்வார அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 20 வருடத்திற்கு முன் ஏரியை தூர்வார வந்த அதிகாரிகள் கரையோரம் இருந்த மண்ணை கரை மீது போட்டு கரையை உயர்த்தி விட்டு ஏரியை தூர்வார படாமல் சென்றுவிட்டனர். தற்பொழுது இந்த ஏரியின் உட்பரப்பும் விவசாய நிலபரப்பும் சமமான அளவில் மண் தூர்ந்து உள்ளதால் ஏரிக்குள் தண்ணீர் தேங்காமல் அப்படியே வெளியே சென்று விடுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.