வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.63.47 லட்சத்திற்கு பருத்தி கொள்முதல்

வலங்கைமான்: வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் பருத்தி அதிகபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 550க்கு ஏலம் போனது 1,320 குவிண்டால் பருத்தி ரூ.63.47 லட்சத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடைக்குப் பிறகு கோடை சாகுபடி ஆக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட ஆதிச்சமங்கலம், செம்மங்குடி, பாடகச்சேரி, சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, பெருங்குடி, நரசிங்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு தற்போது மகசூல் எடுக்கப்பட்டு வருகிறது.

மகசூல் செய்யப்பட்ட பருத்தியை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்வதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் மறைமுக ஏலத்தில் பருத்தி விற்பனை செய்வதற்காக வியாழக்கிழமை முதலே வாகனங்களில் பருத்தியை ஏற்றிக்கொண்டு விவசாயிகள் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்றனர். பின்னர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயலாளர் வித்யா தலைமையில் மேற்பார்வையாளர் வீராசாமி மேற்பார்வையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் இந்திய பருத்தி கழகம் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் பருத்தி அதிகபட்சமாக குவிண்டால் 5 ஆயிரத்து 550க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 809க்கும் சராசரி விலையாக ரூ.4ஆயிரத்து 782க்கு விற்பனையானது. மொத்தம் 1,320 குவிண்டால் பருத்தி 63.47லட்சத்து 122க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

Related Stories: