ராஜஸ்தான் சட்டமன்றத்தை ஜூலை 31ல் கூட்ட ஆளுநர் மறுப்பு!: ஆளுநர் முடிவு பற்றி முதல்வர் கெலாட் அடுத்தகட்ட ஆலோசனை..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியத்திற்கு கூடுதல் காரணங்களை கேட்டு கோப்புகளை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா திருப்பி அனுப்பிவிட்டார். வரும் வெள்ளியன்று அவையை கூட்டி கொரோனா தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அரசு சார்பில் ஆளுநருக்கு கோரிக்கைவிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்துவிட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, சட்டமன்ற விவகாரங்கள் துறை குழுவிடம் கூடுதல் விவரங்கள் கேட்டுள்ளார்.

இதனால் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் அமைச்சர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதால் அவையில் தமது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அசோக் கெலாட் உள்ளார். சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாகவும் முடிவு கிடைக்கவில்லை. நோட்டீஸ்க்கு எதிராக சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் கூறிவிட்டது.

இதனால் உச்சநீதிமன்றத்தை சபாநாயகர் தரப்பு அணுகியது. இதில் திடீர் திருப்பமாக சபாநாயகர் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதே இதற்கு காரணமாக சபாநாயகர் தரப்பு கூறியுள்ளது.

Related Stories: