திருவில்லிபுத்தூர்: ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தங்க தேரோட்டம், வரலாற்றில் முதல்முறையாக பக்தர்களின்றி கோயில் வளாகத்திற்குள் நடைபெற்றது. ஆண்டாள் பிறந்த தினமான ஆடி பூரத்தன்று, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் திருத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில் வளாகத்திலேயே தேரோட்டத்தை நடத்த அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் நேற்று காலை 8.05 மணிக்கு கோயில் வளாகத்தில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆண்டாளும், ரங்கமன்னாரும் அலங்கரிக்கப்பட்டு சர்வ அலங்காரத்தில் தேரில் கொண்டு வரப்பட்டனர். பின்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.