காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி!: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு..!!

தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கேரளா, வயநாடு மற்றும் கர்நாடகா மாநிலம், குடகு, மண்டியா, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்து வருவதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கே.எஸ்.ஆர். அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்கு தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணையில் திறக்கப்படும் தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 7,500 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கலின் அதிக நீர்வரத்தின் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி, ஐவர் பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் மேட்டூர் அணைக்கு இன்றைய நிலவரப்படி நீர்வரத்து 4,710 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து பாசன வசதிக்காக 10,000 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸின் காரணமாக ஒகேனக்கலுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் சுற்றுலா பயணிகள் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தற்போது வரை, அருவிகளில் குளிப்பதற்கும், படகு இயக்குவதற்கும் தடை நீடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: