அனைத்து முதல்வர்களுக்கும் அழைப்பு; அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆகஸ்ட் 5-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி...!!!

புனே: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆகஸ்ட் 5-ம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். பாபர் மசூதி, ராமஜென்ம பூமி நில வழக்கில், கடந்த நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் உள்ள 2.77  ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டி கொள்ளலாம் என்றும் இதற்காக 3 மாதத்துக்குள் அறக்கட்டளையை நிறுவ வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து, மசூதி கட்ட சன்னி வக்பு  வாரியத்துக்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ராமர் கோவில் கட்டுவதற்கு, அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில், அறக்கட்டளையை மத்திய அரசு  கடந்த பிப்ரவரி மாதம் அமைத்தது.

இதற்கிடையே, அயோத்தியில், கோவில் கட்டுவதற்கான முதல் கட்ட பணிகள், கடந்த மார்ச் மாதம் நடந்தன. சர்ச்சை ஏற்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த தற்காலிக ராமர் கோவில், வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கட்டுமான  பணிகளை துவங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்த அறக்கட்டளை முடிவு செய்தது. விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அயோத்தியில், ஆகஸ்ட் 5-ம் தேதி,  காலை, 11:00 மணி முதல் மதியம், 1:10 மணி வரை, பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க நேரம் ஒதுக்கி இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் புனேயில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரி, பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவார்.  நிகழ்ச்சியில் சமூக இடைவெளி உறுதி செய்வதற்காக, 150 அழைப்பாளர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். அடிக்கல் நாட்டும் முன், ராமர் மற்றும் ஹனுமான் காரி கோவிலில்  பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்வார். அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க அனைத்து முதல்வர்களும் அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Related Stories: