திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஊரடங்கின் போது வெளியே வந்ததாக கூறி போலீசார் வாகனத்தை பறித்ததால் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 12ம் தேதி தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருந்த போது ஆம்பூரில் வெளியே வந்த இளைஞர் முகிலனின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து வாகனத்தை தரும்படி முகிலன் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் போலீசார் வாகனத்தை தர மறுத்ததால் மனமுடைந்த முகிலன் மண்ணென்னையை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.