சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சுமார் 6 ஆயிரம் நூலகங்கள் இயங்கி வருகின்றன. அதில் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் அரசின் நிதி ஒதுக்கீட்டால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நூலகங்களுக்கு வரும் மாணவர்கள், இளைஞர்கள், மகளிர், முதியவர்கள், எளியவர்கள் ஆகியோர் அங்கேயே அமர்ந்து படித்து பயன் பெறுகின்றனர். ஆனால் இந்த நூலகங்களுக்கு மொத்த ஒதுக்கீட்டில் இருந்து, 6.5 சதவிகிதம் ஒதுக்கீடுதான், இதழ்கள் வாங்குவதற்கு கொடுக்கப்படுகிறது. வெளிவரும் இதழ்களின் எண்ணிக்கை கூடினாலும், இதழ்களின் விலை கூடினாலும், வாசிப்பாளர்களின் எண்ணிக்கை கூடினாலும், நூலகத்திற்கு வழங்கும் ஒதுக்கீடு மட்டும் கூடாமலேயே இருக்கிறது.