தங்கக்கடத்தல் வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஃபைசல் பரீத் துபாயில் கைது!!!

துபாய்:  துபாயிலிருந்து கேரளாவிற்கு தங்கம் அனுப்பிய வழக்கில் ஃபைசல் பரீத் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவை உலுக்கியுள்ள தங்கக்கடத்தல் வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தங்கக்கடத்தலில் முக்கிய புள்ளியான ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளிகளின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது, தங்கக்கடத்தல் மூலம்  பணத்தை தீவிரவாதிகளுக்கு அனுப்பியுள்ளனர் என்பதுதான் பிரதான குற்றச்சாட்டாகும்.

இந்த வழக்கில் 3வது குற்றவாளியான ஃபைசல் பரீத் துபாயில் பதுங்கி இருந்ததால் அவரை கைது செய்வதில் அதிகாரிகளுக்கு சிக்கல் நிலவியது. இந்நிலையில்,  ஃபைசல் பரீத்துதான் துபாயிலிருந்து தங்கக்கட்டிகளை திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரகம் பேரில் அனுப்பி வைத்தவர் என்பது தெரியவந்தது. எனவே ஃபைசல் பரீத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டால்தான், அவர்மூலம் தீவிரவாதிகளுக்கு பணம் சென்றது தெரியவரும் என்று என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஃபைசல் பரீத்தை இன்டர்போல் உதவியுடன் துபாய் அரசுக்கும் தெரிவித்ததன்பேரில், ஃபைசல் பரீத் ஏற்கனவே அங்கு முடக்கிவைக்கப்பட்டிருந்தார்.

மேலும், ஃபைசல் பரீத் வேறு நாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக அவரது பாஸ்ப்போட்டையும் மத்திய அரசு ரத்து செய்திருந்தது. இந்நிலையில்தான், ஃபைசல் பரீத் இன்று துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நாளையதினம் இந்தியாவிற்கு நாடுகடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபைசல் பரீத் இந்தியா வந்தவுடன் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: