அமர்நாத் வரும் பக்தர்களை தாக்க தீவிரவாதிகள் சதி: பகல்காம் சாலை மூடல்

அமர்நாத் பனிலிங்க குகைக்கோயில், கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்திலும், நகரில் இருந்து 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.

இந்த கோயில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. 40 அடி உயரம் கொண்டது.

இந்த குகைக்கோயில், 51 சக்தி பீடங்களில் தேவியின் தொண்டைப் பகுதி விழுந்த இடம் என புராணங்களில் கூறப்படுகிறது.

ஜம்மு: அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பகல்காம், அனந்த்நாக் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் பனிலிங்க குகைக்கோயில். மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் இந்த பனிலிங்கம் தானாக உருவாகும். இதை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தாண்டும் பனிலிங்கம் உருவாகி இருக்கிறது. கடந்த மாதம் 23ம் தேதியே இதை தரிசிக்க பக்தர்களை அனுமதிக்க ஜம்மு அரசு திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் அதிகமானதால், அது கைவிடப்பட்டது. தற்போது, தினமும் 500 பக்தர்களை மட்டுமே அனுமதித்து, தரிசனத்தை தொடங்கலாம் என அது  திட்டமிட்டுள்ளது. அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், காஷ்மீரில் ராணுவ தயார்நிலையை பார்வையிட சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று பனிலிங்கத்தை தரிசனம் செய்தார். ராணுவத்தின் கண்காணிப்பில் இந்த கோயில் உள்ளது.  இந்தாண்டு பனிலிங்கத்தை மக்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டால், அவர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டி இருப்பதாக ராணுவத்துக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இதையடுத்து, இந்த கோயிலுக்கு செல்ல பயன்படுத்தப்படும் சாலைகளில் ஒன்றான பகல்காம் சாலை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: