சென்னை: வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் மழை மேகங்கள் சூழ்ந்துள்ளன. அதே நேரத்தில் தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருக்கழுக்குன்றத்தில் 90 மிமீ மழை பெய்துள்ளது. கேளம்பாக்கம் 80மிமீ, சென்னை விமான நிலையம் 70 மிமீ, சோழவரம் 50 மிமீ, தாம்பரம், நத்தம், செய்யூர், பூண்டி 40 மிமீ, பள்ளிப்பட்டு, தாமரைப்பாக்கம் 30 மிமீ மழை பெய்துள்ளது.
இந்நிலையில், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக வட தமிழகம், புதுவை, காரைக்கால், பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால், பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மழை பெய்யக் கூடாது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்.