திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் வழக்கை திசை திருப்பாமல் என்.ஐ.ஏ சுதந்திரமாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அரசுக்கு நெருக்கடி தரவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர போவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் போலி சான்று தந்து அரசு பணியில் சேர்ந்தாரா என்பதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. போலி சான்றா என்பதை விசாரிக்க தலைமை செயலாளர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டி அவரின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகம் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த மாதம் 30ம் தேதி திருவனந்தபுரம் விமானநிலையத்தில் பறிமுதல் செய்தனர். தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் இருவரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரக தூதரத்தின் முன்னாள் ஊழியர், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் விற்பனை மேலாளராக இருந்தபோது இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இந்த விவகாரம் வெளியானதும், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும், முதல்வரின் தனிப்பரிவுச் செயலாளராகவும் இருந்த சிவசங்கரன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.