திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு, மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியானது தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால், பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 12ம்(நாளை) தேதி சேலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிக்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில்  பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, திருத்தணியில் 8 செ.மீ  மழையும், வெம்பாக்கம், காஞ்சிபுரம் தானியங்கி மழைமானி பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், விரிஞ்சிபுரம் தானியங்கி மழைமானி, அரக்கோணம், பகுதிகளில் தலா செ.மீ மழையும், மேலாளத்தூர், காஞ்சிபுரம், ஏற்காடு, செம்பரம்பாக்கம், பூந்தமல்லி பகுதிகளில் தலா 4 செ.மீ, திருப்பத்தூர், கொளப்பாக்கம், தர்மபுரி, குடியாத்தம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர், ஆற்காடு பகுதிகளில் தலா 3 செ.மீ  மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜூலை 11(இன்று), வடக்கு அரபிக்கடல், கேரளா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 11மற்றும் 12ம் தேதிகளில் கடலோர கர்நாடகா, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 11 முதல் 15ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 14 மற்றும் ஜூலை 15ம் தேதிகளில் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: