டெல்லி: இந்தியா குளோபல் வீக் 2020 நிகழ்ச்சி தொடக்க விழாவில் டெல்லி இருந்தபடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 30 நாடுகளின் பிரதிநிதிகளுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் குடிமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கியுள்ளோம். அடிப்படை கட்டமைப்பில் இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இலவச எரிவாயு, வங்கிகளில் பணம், இலவச தானியங்களை வழங்கியுள்ளோம். கிராமப்புற பொருளாதாரத்தை மீட்டெடுக்க இது பயன்படும். இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் வெளிப்படையானது என்றார்.
உலக மறுமலர்ச்சியில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. 6 ஆண்டுகளாக வரி சீரமைப்பு உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எந்த சோதனையாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வரும் என்பது வரலாறு. மக்களின் சுகாதார நலனை போல பொருளாதார நலனிலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அரசின் உதவி திட்டங்கள் மக்களுக்கு பெரிய அளவில் உதவியது. சீர்திருத்தங்கள் காரணமாக விவசாயம், சிறுகுறு துறைகள் வளர்ச்சியடைந்துள்ளன. இந்தியாவில் முதலீடுகளுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு திறன்களை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. இயல்பிலேயே இந்தியர்கள் திறமை வாய்ந்தவர்கள். விண்வெளித்துறையில் தனியார் முதலீட்டுக்கு மிகப்பெரும் வாய்ப்புகள் உள்ளன. இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் முக்கியத்துவம் கொரோனா தொற்றால் தெரிய வந்துள்ளது. சொந்த நாட்டுக்கு மட்டுமல்லாமல் உலகத்துக்கே பயன் தரக்கூடியவை இந்திய மருத்து நிறுவனங்கள் என்றும் பிரதமர் மோடி உரையாற்றினார்.