சின்னமனூர்: சின்னமனூர் அருகே, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள இரவங்கலாறு தேயிலை தோட்டங்களில் குட்டியுடன் உலா வரும் யானைகளால் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, மேல்மணலாறு, மகாராஜா மெட்டு இரவங்கலாறு உள்ளிட்ட 7 மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் தேயிலை, ஏலம், மிளகு, காபி ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைப் புலிகள், காட்டுமாடுகள், சிங்கவால் குரங்குகள், அரியவகை மலைப்பாம்பு மற்றும் பறவையினங்கள் உள்ளன.