விவசாய மண் வளத்தை பாழாக்கும் கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

காளையார்கோவில்: காளையார்கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் பல ஏக்கர் விளைநிலங்களில் உள்ள கருவேல மரங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காளையார்கோவில் ஒன்றியம் சுமார் 360 கிராமங்களைக் கொண்டது. இங்கு விளைநிலங்களில் சீமைக் கருவேலமரங்களின் அதிகப்படியான வளர்ச்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தைச் சுத்தம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதனால் மண் மலட்டுத் தன்மை ஆவதுடன் நிலத்தடி நீரும் அதிகளவு உறிஞ்சப்படுவதினால் விளைச்சல் பாதிப்படைகிறது.

கருவேல மரங்களை வேருடன் அழித்தால் மட்டுமே விளைநிலங்களை காப்பாற்ற முடியும். இதற்கான இயந்திரச் செலவு அதிகமாக இருப்பதால், போதிய வசதியில்லாத விவசாயிகள்  அழிக்காமல் விட்டு விட்டனர். இதைகருத்தில் கொண்டு சில வருடத்திற்கு முன்னால் சீமைகருவேல மரங்களை அளிப்பதற்கு அரசு முன்வந்து தாலுகா அலுவலகத்தின் மூலமாக ஏலம் விடப்பட்டன. ஏலம் எடுப்பவர்களிடம் கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதற்கான விதி முறைகளை அறிவிக்காமல் ஏலம் விடப்பட்டதால் ஒவ்வொரு பகுதிகளிலும் முழுமையாக வெட்டாமலும், வெட்டிய மரத்தின் வேர்பகுதிகளை தோண்டாமலும் விட்டு விட்டனர்.

இதனால் தற்போது சில மாதங்களுக்கு முன்னால் பெய்த சிறு மழைக்கு அதிகமாக கருவேல மரங்கள் முளைத்து உள்ளன. இதேநிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் விவசாயம் செய்வதற்கான நிலங்கள் குறைந்து கருவேல மரங்கள் மட்டுமே நிலங்களில் வளரக்கூடிய நிலை ஏற்படும். அரசு மீண்டும் நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை வேருடன் அழித்தால் மட்டுமே விளைநிலங்களை காப்பாற்ற முடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: