மன அழுத்தத்தை குறைக்க தூத்துக்குடி போலீசாருக்கு சிறப்பு யோகா பயிற்சி: எஸ்பி துவக்கி வைத்தார்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 25 எஸ்ஐகள் உள்ளிட்ட 75 போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்க எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் 25 எஸ்ஐகள், சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படை காவலர்கள் 50 பேர் என மொத்தம் 75 பேர் நேற்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் யோகா பயிற்சியை எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்து அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கினார். யோகா மற்றும் மேலாண்மை பயிற்சிகளை பயிற்றுநர் ராஜலிங்கம் வழங்கினார். இதில் இன்ஸ்பெக்டர்கள் முத்து சுப்பிரமணியன்,  பிரபாவதி, எஸ்ஐகள், தலைமைக் காவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி ஆயுதப்படை காவல் இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன், எஸ்ஐ மணிகண்டன் செய்திருந்தனர். போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டதை பலரும் வரவேற்று பாராட்டியுள்ளனர்.

Related Stories: