டயாலிசிஸ் செய்ய இனி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை; புதுக்கோட்டையில் வீட்டிலிருந்தே டயாலிசிஸ் செய்யும் முறை அறிமுகம்!!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் வீட்டிலிருந்தே டயாலிசிஸ் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டயாலிசிஸ் செய்ய இனி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை எனவும் கூறப்படுகிறது. புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடந்த 15ம் தேதி சிறுநீரக கோளாறு காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை அல்லது மூன்று முறை மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்து கொள்வது வழக்கம்.

இதனால் காலவிரயம், பொருளாதார இழப்பு போன்றவை ஏற்படுத்துவது உண்டு. ஆனால் அதற்கு மாற்றாக வீட்டிலிருந்தே சிகிச்சை செய்யும் முறையினை அருண்குமார் என்பவர் மேற்கொண்டுள்ளார். இந்தமுறை பெரிடோனியல் டயாலிசிஸ் என்று கூறுகிறார் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம். புதிய சிகிச்சையால் கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு அடிக்கடி வருவது தவிர்க்கப்படுவதாக கூறிய மீனாட்சி சுந்தரம், ஹீமோடயாலிசிஸ் செய்து கொள்வதினால் ஏற்படும் பின்விளைவுகளும், குறிப்பாக நோய் தொற்று இதன்முலம் தவிர்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு லிட்டர் முதல் மூன்று லிட்டர் வரை டயாலிசிஸ் திரவம் தேவைப்படலாம் என்று தெரிவித்த அவர், ஒரு நாளைக்கு 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை செலவாகக்கூடிய இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செயல்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: