செய்யூர்: செய்யூர் அருகே பவுஞ்சூர் பகுதியில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதனால், சுற்று வட்டார மக்கள் நோய் பரவும் அச்சத்தில் உள்ளனர். இதையொட்டி, வியாபாரிகள் தாமாகவே முன்வந்து 3 நாட்களுக்கு முழு கடையடைப்பு செய்வதாக அறிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா பவுஞ்சூர் மற்றும் அதனை சுற்றி, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மைய பகுதியாக உள்ள இங்கு, தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும், லத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், டாஸ்மாக் கடை, அரசு வங்கிகளும் உள்ளதால், எப்போதும் பொதுமக்களின் கூட்டம் நிறைந்து காணப்படும்.