திருவெறும்பூர்: திருச்சி தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் வகையில் கல்லணை கொள்ளிட ஆற்றில் ரூ.67 கோடி செலவில் கட்டப்பட்டும் உயர்மட்ட பாலத்தின் பணி நிறைவடைவது திருச்சி அரசு அதிகாரிகள் கையில்தான் உள்ளது. திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்திற்கு கல்லணை வழியாக கனரக வாகனங்கள் சென்று வரும் பொருட்டு ஒரு புதிய உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டுமென திருச்சி தஞ்சை மாவட்ட பொது மக்களும் சுற்றுலாப் பயணிகனளும் அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு கடந்த 2016ம் ஆண்டு திருச்சி தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் உயர் மட்ட பாலம் கல்லணையில் ரூ.67 கோடி செலவில் கட்டும் பணி கடந்த கடந்த 2016 டிசம்பர் 4ம் தேதி துவங்கி, தற்போது பாலம் பணி முழுவதுமாக நிறைவு பெற்றுவிட்டது.
இந்நிலையில் கல்ணை கோவிலடி சாலையோடு பாலத்தை இணைப்பதற்கு உரிய வேலைகள் நடந்து வருகிறது. அதனால் விரைவில் கல்லணை கொள்ளிட ஆற்றில் போக்குவரத்து தொடங்குமென பொதுமக்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் அந்த பாலத்தை இணைக்கும் வகையில் திருச்சி மாவட்டம் கிளிகூடு சாலையோடு அமைக்கும் பணி இதுநாள் வரை தொடங்கப்படவில்லை. காரணம் அந்த பகுதியில் உள்ள 29 விவசாயிகளின் விளை நிலங்களை பாலத்தை இணைக்கும் சாலை அமைக்க அரசு கையகப்படுத்த படுவதாக கடந்த 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது.ஆனால் அரசு அந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை இதுநாள் வரை வழங்கவில்லை. இதுகுறித்து அந்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித பயனுமில்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் 21ம் தேதி இது சம்பந்தமாக விவசாயிகளிடம் திருச்சி கலெக்டர் சிவராசு கல்லணை ஆய்வு மாளிகையில் போச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பயனில்லை. இந்நிலையில் ஸ்ரீரங்கம் தாசில்தார் மற்றும் வருவாய் துறையினரை வைத்து கிளிக்கூடு விவசாயிகளிடம் வங்கி கணக்கு புத்தகங்கள் கொண்டு வந்தால் உடனே இழப்பீட்டு தொகை வங்கிக் கணக்கில் செலுத்துவதாக ஆசை வார்த்தை கூறி ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட கடிதங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். இந்த நிலையில் இம்மாதம் 26ம் தேதிக்குள் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்குவதாக வருவாய்துறையினர் அறிவித்திருந்தனர். ஆனால் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்று சம்பந்தப்பட்ட விவசாயிகள் கூறுகின்றனர்,இந்நிலையில் திருச்சி கலெக்டர் சிவராசு கல்லணையிலிருந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி 35 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது ஆனால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. இதனால் கல்லணை கொள்ளிட ஆற்றின் உயர்மட்ட பாலம் எப்பொழுது திறக்கப்படும் என்பது திருச்சி அதிகாரியின் கையில்தான் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது பொறுப்பை உணர்ந்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்கி விரைவாக கல்லணை கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.