திருநின்றவூர்: திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம், முருகேசன் நகர், அந்தோணி நகர், என்ஜிஓ நகர், லட்சுமிபுரம், தாசரதபுரம், அம்பிகாபுரம், வச்சலாபுரம், சாமி நகர், தாமோதரன் நகர், கன்னியப்பன் நகர், சி.டி.எச் சாலை ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்தும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிக்கு முருகேசன் நகர் பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டி மூலம் தெருக்களில் குழாய் வழியாக குடிநீர் 3 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் குடிநீரை பெற்று பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். இந்த பகுதிக்கு கடந்த இரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால், பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வந்தனர். இதனால், குடியிருப்போர் கேன் வாட்டர் மூலம் ₹35க்கு குடிநீரை கடைகளில் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.