கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எல்லைமீறிய தாக்குதல்: கேள்விக்குறியான 'காவல்துறை உங்கள் நண்பன்'வாசகம்..!!!

கோவை: காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகத்தை மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறது அண்மைக்காலமாக நடைபெறும் நிகழ்வுகள். கொரோனா பொதுமுடக்கத்தை மீறுவோர் மீது காவல் துறை நடத்தும் தாக்குதல்கள் சர்ச்சைக்கு மேல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். பொதுமுடக்க  விதிகளை மீறுவோருக்கு தொடக்கத்தில் சிறுசிறு தண்டனைகள் கொடுத்து வந்த காவல் துறையினர் அண்மை காலமாக லத்தி ஓங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் பொது முடக்க விதிகளை மீறி செல்போன் கடைகளை திறந்து வைத்ததால் தந்தை, மகனை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

 அங்கு அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, காவலர்கள் கொடுமைபடுத்தி கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சர்ச்சை பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில், கோவையில் 10ம் வகுப்பு மாணவனை தாயின் கண்முன்னே காவல் துறையினர் தாக்கியதற்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றனர். நேரம் கடந்து தள்ளுவண்டி கடை நடத்திய தாயுடன் வாக்குவாதம் செய்த காவல் துறையினரை சிறுவன் தட்டிக்கேட்டுள்ளான். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறுவனை காவல் துறையினர் தாக்கியுள்ளனர்.  

மகனை காக்க தாய் கண்ணீருடன் கதறும் அந்த காட்சிகளை தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இது நியாயமா?என கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும் விதிகளை மீறியதாக கூறி ஒரு நபரை 4 காவலர்கள் சூழ்ந்து தாக்கும் காட்சிகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் உள்ள காலத்தில் காவல் துறையினர் மக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். அதேசமயம், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அரசுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தரவேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: