புதுடெல்லி: ‘‘ராக்கெட் தயாரிப்பு, செயற்கைக்கோள் ஏவுதல் சேவையிலும் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும்’’ என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். பிற கிரகரங்களின் ஆய்வு திட்டங்கள் உட்பட அனைத்து விதமான விண்வெளி செயல்பாடுகளிலும் தனியார் துறையை அனுமதிக்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இது குறித்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் கே.சிவன், வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று அளித்த பேட்டி: இஸ்ரோவின் கிரக ஆய்வு திட்டங்களிலும் தனியாருக்கு அனுமதி வழங்கியிருப்பது மிகப்பெரிய சீர்த்திருத்தமாகும். ராக்கெட், செயற்கைக்கோள்கள் தயாரித்தல், வணிக அடிப்படையில் ஏவுதள சேவைகளை வழங்குதல் போன்ற வற்றிலும் தனியாருக்கு அனுமதி தரப்படும்.