ஆலந்தூர்: ஆலந்தூர் முத்தையா ரெட்டி தெருவை சேர்ந்த 72 வயது முதியவருக்கு, கடந்த 11ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆலந்தூர் 161வது வார்டு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் இந்த முதியவரை மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறி, ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். ஆனால், 13 நாட்களான பிறகும் முதியவர் குறித்த எந்த தகவலையும் உறவினர்களுக்கு சுகாதாரத்துறையினர் தெரிவிக்கவில்லை. முதியவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது உடன் இருந்த பரங்கிமலை போலீசாரிடம் கேட்டபோது, நோயாளியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்புவதுதான் எங்கள் வேலை. மற்றபடி எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது, என கூறியுள்ளனர். இதையடுத்து உறவினர்கள் ராஜிவ்காந்தி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று தேடினர்.