நெல்லை: நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கருவாடு விலை அதிகரித்து வருவதால், அசைவ பிரியர்கள் திண்டாடி வருகின்றனர். ஒரு கிலோ சீலா கருவாடு ரூ. ஆயிரத்தை தொட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மீனுக்கு இணையாக கருவாடும் மக்கள் மத்தியில் விரும்பி சாப்பிடப்படுவதுண்டு. நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்களில் இதற்காகவே மீனை பிடித்து பதப்படுத்தி, காய வைத்து கருவடாக்கி விற்பனைக்கு அனுப்பி வைப்பர். நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள சிறு, சிறு வியாபாரிகள் பொதுவாக மேலப்பாளையம் சந்தைக்கு வரும் கருவாடுகளை வாங்கி அந்தந்த பகுதிகளில் விற்பனை செய்வதுண்டு. மேலப்பாளையம் சந்தை 4 மாதங்களாக பூட்டி கிடக்கும் சூழலில், நெல்லை கடலோர பகுதிகளில் இருந்தும் கருவாடு வரத்து தற்போது குறைந்துவிட்டது. நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு தற்ேபாது ராமேஸ்வரம், திருச்சி பகுதிகளில் இருந்தே கருவாடு கொண்டு வரப்படுகிறது. கயத்தாறில் இருந்து மொத்த வியாபாரிகள் அவற்றை கொள்முதல் செய்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். ராமேஸ்வரத்திலும் தேவைக்கேற்ப தற்போது கருவாடு கிடைப்பதில்லை. இதனால் அதன் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.