கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று கொரோனா டெஸ்ட் எடுக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தின் 39 ஊராட்சிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகள், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி ஆகியவை உள்ளன. தற்போது, கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால், வரும் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு உள்ளது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 39 ஊராட்சிகளில் அடங்கிய கிராமங்களில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டது.