குளிக்கச் சென்றவர்கள் உயிரிழந்த சோகம்: பவானி சாகர் அணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த ரகுராம் (20), அன்னூர் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரனேஷ் (20), யஷ்வந்த் (20), கதிரேசன் (20), அன்னூர் தெலுங்குபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்த சுரேஷ் ராஜ் (20) ஆகிய 5 பேரும் நண்பர்கள். இவர்களில் 4 பேர் கோவையில் உள்ள தனியார் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பி.பார்ம் படித்து வந்தனர். கதிரேசன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார்.

ஊரடங்கு காரணமாக கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ளதால் 5 பேரும் நேற்று காலை அன்னூரில் இருந்து 3 பைக்குகளில் பவானிசாகர் அருகே உள்ள சித்தன்குட்டை பகுதிக்கு வந்தனர். தற்போது அணையின் நீர்மட்டம் 80 அடியாக உள்ளது. 5 பேரும் பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் இறங்கி குளித்தனர். அப்போது பிரனேஷ் சற்று ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது நீச்சல் தெரியாமல் திடீரென  நீரில் மூழ்கினார்.  இதை பார்த்த மற்ற 4 பேரும் பிரனேஷை காப்பாற்ற முயன்றபோது யஷ்வந்த், கதிரேசன், ரகுராம் ஆகியோரும் நீரில் மூழ்கி மாயமாகினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ்ராஜ் மற்றும் அக்கம்பக்கம் உள்ள விவசாயிகள் உடனடியாக பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு பவானிசாகர் போலீசார், சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பின் 4 பேரின் உடல்களை மீட்டனர். தகவலின்பேரில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்துமாணவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.  இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: