வாஷிங்டன் : கொரோனா தொற்றுநோயின் புதிய மற்றும் அபாய கட்டத்தை உலக நாடுகள் எட்டி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த அளவில் பாதிப்பு எண்ணிக்கை கூடியிருப்பது இதுவே முதல் முறையாகும். அமெரிக்கா, தெற்கு ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா மிகத் தீவிரமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது சவாலாக இருப்பதாக கூறியுள்ள அநத அமைப்பு, உலக நாடுகள் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.