தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு நிலக்கரி ஏற்றி வந்த கப்பலிலிருந்த பிலிப்பைன்சை சேர்ந்த மாலுமிக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கப்பலிலிருந்த மற்ற ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் இருந்து தூத்துக்குடிக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு கப்பல் கடந்த 16ம் தேதி வந்தது. நேற்று முன்தினம் அக்கப்பல் துறைமுகத்திற்குள் வரத்தயாராக இருந்த நிலையில் துறைமுக மருத்துவ அதிகாரிகள் கப்பல் ஊழியர்களை பரிசோதனை செய்தனர். இதில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மாலுமிக்கு அதிக காய்ச்சல், இருமல் இருந்ததால் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து, கப்பலில் தனிமைப்படுத்தினர். மேலும் அந்த கப்பல் வெளித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.