திருப்புவனம்: கீழடி அருகே அகரத்தில் நடந்த அகழாய்வில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த தங்கக்காசு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் பிப்.19 முதல் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடக்கிறது. அகரத்தில் தற்போது வரை 6 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் முதலில் தோண்டப்பட்ட குழியில் 7 அடி ஆழத்தில் தங்கக்காசு ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது. இதனுடன் 5 செப்பு காசுகளும் கிடைத்துள்ளன. தங்கக்காசு 300 மில்லி கிராம் எடையும், ஒரு செமீ நீள அகலத்திலும் உள்ளது. தங்கக்காசை காட்டிய தொல்லியல் துறையினர், செப்பு காசுகளை காட்டவில்லை.