ஆவடி: புறநகர் பகுதியில் வீடு, கடை, பார்க் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கும் பைக்குகளை மர்ம நபர்கள் திருடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில், பட்டாபிராம் இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் தனிப்படையினர் திருடர்களை தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று காலை தனிப்படை போலீசார் ஆவடி அடுத்த கருணாகரச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடங்கினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். பைக்கிற்கு எந்த ஆவணமும் இல்லை. மேலும், அவர் பத்திரிகையாளர் என்று காட்டிய அடையாள அட்டை போலி எனத் தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் பட்டாபிராம் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.