புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால் தொழில் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, வராக்கடன் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது வங்கிகளின் நிதி நிலையை மேலும் மோசமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை பிசிஏ சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டன. மேலும், பங்குச்சந்தைகள் சரிவால், வங்கிகளின் பங்கு மதிப்புகள் குறைவாகவே உள்ளன. எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம் இந்த ஆண்டு ஈடேற வாய்ப்பே இல்லை. பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை மோசமானதால் மத்திய அரசு மூலதன நிதியை வழங்கியது. இதனால் சில பொதுத்துறை வங்கிளில் அரசு பங்கு 75 சதவீதத்தை தாண்டி விட்டது. கொரோனாவால் தனியார் வங்கிகளும் மிக மோசமான வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. எனவே, எந்த ஒரு பொதுத்துறை வங்கியை தனியார் மயமாக்க முயற்சி மேற்கொண்டாலும் இந்த ஆண்டு சாத்தியமாகாது என அதிகாரிகள் கூறுகின்றனர்.