தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை அரசு காலரா மருத்துவமனையின் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒரு சிறுவன் கடந்த வாரம் மாயமான நிலையில், தற்போது மேலும் 2 சிறுவர்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை ராயபுரம் சூரிய நாராயண சாலையில் அரசு சிறார் காப்பகம் உள்ளது. பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் 50க்கும் மேற்பட்டோர் இங்கு தங்கி இருந்தனர். இந்நிலையில், இந்த காப்பக நிர்வாகி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கிருந்து சிறுவர்களுக்கும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 35 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 7ம் தேதி உறுதி செய்யப்பட்டது. உடனடியாக, அவர்கள் அனைவரையும் தண்டையார்பேட்டையில் உள்ள அரசு காலரா மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதித்தனர்.