களக்காடு: களக்காட்டில் புதர் மண்டி கிடக்கும் குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். களக்காடு கப்பலோட்டிய தமிழன் தெரு அருகே செண்பகாதேவி குளம் என்ற வட்டகுளம், நெடுங்குளம் ஆகிய குளங்கள் உள்ளன. இந்த குளங்களுக்கு மூங்கிலடி நாங்குநேரியான் கால்வாயில் இருந்து வெப்பல் ஓடை வழியாக வரும் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த 2 குளங்கள் மூலம் அப்பகுதியில் உள்ள 220 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் விவசாயிகள் வாழை, நெல் பயிரிட்டுள்ளனர். களக்காடு பேரூராட்சிக்குட்பட்ட இந்த 2 குளங்களும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. குளத்தில் காடுபோல அமலை செடிகள் முளைத்துள்ளன. மேலும் செடி, கொடிகள் அடர்ந்து புதர் மண்டி கிடக்கின்றன. குளங்களில் நீர் தேங்கும் பகுதிகளில் மண் மேடுகளும் உருவாகியுள்ளன. இதனால் குளத்தில் போதியளவு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை நிலவுகிறது. மேலும் குளங்களில் உள்ள தண்ணீர் விரைவில் வற்றி விடுவதால் பயிர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு எழுந்து வருகிறது.