சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவது ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 5ம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்த பிறகு கடந்த மாதம் 7ம் தேதி சென்னை நீங்கலாக தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆரம்பத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் அவை தற்போது கடைபிடிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. டாஸ்மாக் கடைகள் தோறும் சானிடைசர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களை நிர்வாகம் முறையாக வழங்கவில்லை என டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:கடந்த மாதம் 7ம் தேதி கடைகள் திறக்கப்பட்ட போது சமூக இடைவெளி உள்ளிட்ட எதுவும் கடைபிடிக்கவில்லை. இதனால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து, 16ம் தேதி மீண்டும் கடைகள் திறக்கப்பட்ட போது டாஸ்மாக் கடைகள் செயல்படுவதற்கான பல்வேறு விதிமுறைகளை அரசு வெளியிட்டது. அதன்படி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிவது, அடிக்கடி சானிடைசர் பயன்படுத்துவது, மணிக்கு ஒருமுறை கடைகளை சுற்றி கிருமி நாசினி தெளிக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை அரசு வெளியிட்டது.