திருவள்ளூர்: திருவள்ளூர் கூவம் ஆற்றுப்படுகையில், இரவு நேரங்களில் மணல் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. இதை வருமானம் கருதி டவுன் போலீசார் கண்டும் காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் இருந்து கூவம் ஆறு துவங்குகிறது. திருவள்ளூர் - புட்லூர் செல்லும் சாலையோரம் இந்த கூவம் ஆறு செல்கிறது. இங்கு பைக்குகளில் மணல் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. இதை அவ்வழியாக ரோந்து செல்லும் டவுன் போலீசாரும் கண்டும், காணாமல் இருக்க தினமும் குறிப்பிட்ட தொகையை மணல் கடத்துபவர்கள் கப்பம் கட்டுகின்றனர். இதனால் மணல் கடத்தும் வாகனங்களை பிடிப்பதில்லை. டவுன் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தாலும், மணல் கடத்துபவர்களிடம் தகவல்களை போலீசார் கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.