டெல்லி: ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஏற்கனவே நடந்த விசாரணையில், புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் எத்தனை தொழிலாளர்கள் உள்ளனர் என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 5-ம் தேதி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். அன்றைய தினம், அனைத்து மாநில அரசுகளின் வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அழைத்து வர அனைத்து மாநில அரசுகளுக்கும் 15 நாள் அவகாசம் வழங்கப்படுவதாக அறிவித்தது. அதுமட்டுமல்லாது, அனைத்து மாநிலங்களும் புலம்பெயர்ந்தோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.