பெரம்பூர்: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னையில் கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை செயல்பட நிபந்தனைகளுடன் அரசு அனுதி வழங்கியுள்ளது. குறிப்பாக, கடைகளில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது, ஒரு கடைக்குள் 5 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும், அவர்கள் பொருள் வாங்கிவிட்டு வெளியே வந்தால் மட்டுமே அடுத்த நபர் செல்ல வேண்டும், முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வழிமுறைகளை பெரும்பாலான கடைகள் பின்பற்றுவதில்லை. அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் கூட்ட நெரிசலாக காட்சியளிக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து, விதிமீறும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும், வடசென்னை பகுதிகளில் இதுபோன்ற விதிமீறல் தொடர்ந்து வருகிறது.