சென்னை: மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு ஒரு நாளைக்கு ₹500 வீதம் நிவாரண உதவியாக வழங்க கோரி மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வக்கீல் விரிவான அறிக்கை அளிக்க 3 வார காலம் அவகாசம் கேட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அறிக்கை தாக்கல் செய்ய 4 வார காலம் அவகாசம் வழங்கினர். மேலும், கடைகள், அடையாள அட்டைகள் வழங்குவது தொடர்பாக ஒரு அதிகாரியை நியமித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.