புவனகிரி: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் வழக்கமாக கோடை காலங்களில் கூட்டம் களை கட்டும். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் பிச்சாவரம் சுற்றுலா மையம் கிட்டத்தட்ட 70 நாட்களுக்கு மேலாக வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், சிறுவர்கள், விளையாடும் பூங்கா ஆள் அரவமின்றி மயானம் போல காட்சி அளிக்கிறது. பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடப்பட்டிருப்பதால் படகு ஓட்டும் தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய வருவாய் இல்லாமல் இவர்கள் தவித்து வருகின்றனர். அதுபோல் சுற்றுலாவை நம்பி உள்ள உணவகங்கள், சிறு சிறு கடைகள், வாடகை கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சுற்றுலா மையம் மூடப்பட்டதால் வருமானமின்றி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.