வேலூர்: வேலூர் மத்திய சிறையில் வாழைத்தோட்டம், மாட்டுத்தீவனம் அமைக்கும் பணியில் கைதிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தண்ணீரின்றி ரோஜா செடிகள் கருகிப்போனது. குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்லும் கைதிகள், தண்டனை காலம் முடிந்து, வெளியே செல்லும் போதும், சுயத்தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சிறைக்குள் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் சிறைக்குள் கைதிகள் படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் சிறை நிர்வாகம் ஏற்படுத்தி தருகிறது. வேலூர் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் நன்னடத்தை கைதிகள் மூலம் போலீசாருக்கான ஷூக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கடந்த 2007ம் ஆண்டு சிறை வளாகத்தில் 2 ஏக்கரில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு, அதில் விளைந்த காய்கறிகள் கைதிகளுக்கான உணவுக்கு பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் அதற்கான செலவினம் கணிசமாக குறைந்தது. இதனால் காய்கறி தோட்டம் 4 ஏக்கர்களாக விரிவுப்படுத்தப்பட்டது. இதில் விளைந்த காய்கறிகள் சிறைச்சாலை தேவைக்குப்போக மீதமாகும் காய்கறிகள் சிறை பஜார் மூலம் வெளியில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.