கேரளாவில் நடந்த கொடூரம்; அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது; மாநில வனத்துறை அறிவிப்பு

திருவனந்தபுரம்; அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் மர்ம நபர்கள் ஊருக்குள் வந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடியை மறைத்து வைத்து கெடுத்துள்ளனர். இதை யானை சாப்பிட்டபோது வெடி வெடித்துள்ளது. இதல் வாய் சிதறி பலத்த காயம் அடைந்தது. இதனால் அந்த யானைக்கு பல நாட்களாக சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யானை நாளுக்கு நாள் மெலிந்தது. வாயில் ஏற்பட்ட காயத்தில் ஈக்கள் மொய்ப்பதில் இருந்து தப்பிக்க யானை தண்ணீருக்குள் இறங்கி தலையை தண்ணீருக்குள் தாழ்த்தி நின்றுள்ளது.

இதையடுத்து, யானையை காப்பாற்ற, கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தண்ணீரில் இருந்து கரையேற்ற முயன்றனர். ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை. தண்ணீரை விட்டு வெளியே வரமறுத்து நின்ற யானை சிறிது நேரத்தில் இறந்தது.  தொடர்ந்து யானை உடல் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போதுதான் அது கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது வன அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் யானை எரிக்கப்பட்டது.   அன்னாசி பழத்தில் வெடியை வைத்து இரக்கமின்றி யானை கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளதாக கேரள வனத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், யார் அந்த நபர் என்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அந்த நபரிடம் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் எதற்காக எப்படி செய்தார்கள் என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: