விருதுநகர்: விற்பனை மந்தம், ஏற்றுமதியில்லாத நிலையால் வத்தல் குவிண்டாலுக்கு ₹1,500 வரை குறைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் பாமாயில் டின்னுக்கு ₹70 உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் வெட்டுக்கிளி படையெடுப்பால், வரும் வாரங்களில் பருப்பு, பயறு விலை உயருமா என்ற எதிர்பார்ப்பு வணிகர்கள் மத்தியில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 31 வரை அமலில் இருந்தது. ஊரடங்கு தளர்வால் அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் குறைந்த பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன. வேலை வாய்ப்புகள் பறிபோனதால் பணப்புழக்கமின்றி மக்கள் வாங்கும் சக்தியை இழந்து நிற்கின்றனர். இதனால் அனைத்து உணவு பொருட்கள் விற்பனையும் சரிந்து கிடக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவால், பாமாயில் டின்னுக்கு ₹70 அதிகரித்து (15 கிலோ) ₹1,250 (1,180) என விற்பனையானது.