அசோக் நகரில் பரபரப்பு: தாய், மகன் மர்மச்சாவு: கொலையா என விசாரணை

சென்னை: பூட்டிய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தாய் மற்றும் மகன் சடலங்களை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.  சென்னை அசோக் நகர் ஸ்டேஷன் சாலையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (75). இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள் வெளிநாட்டில் வசித்து வருகிறார். மகன் அபிராம் விக்ரம் (42), தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்றதால், அபிராம் விக்ரம் தனது தாய் ராஜேஸ்வரியுடன் வசித்து வந்தார். கடந்த 3 நாட்களாக இவர்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. வீட்டு கதவும் பூட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இவர்கள் வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசியதால், இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அசோக் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேஸ்வரி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, தாய் மற்றும் மகன் படுக்கை நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இருவரின் சடலங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அபிராம் விக்ரம் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது சொத்துக்காக யாரேனும் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அசோக் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: