திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள சஷ்டி மண்டபம் அருகே யானை கட்டப்பட்டுள்ள இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோயில் அதிகாரிகளிடம் பாகனை தாக்கியது குறித்து கேட்டறிந்தார். முன்னதாக பலியான பாகன் காளிதாஸ் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்திற்க்கு ஆறுதல் கூறிவிட்டு, பாகனின் குழந்தைக்கு கல்வி உதவி செய்ய உறுதியளித்துள்ளார்.பின்னர் திமுக எம்எல்ஏ கூறுகையில்,‘‘அதிகளவில் பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் மேலும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படாமல் காக்க இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை இணைந்து யானையை வனத்துறை கட்டுப்பட்டில் உள்ள முகாமிற்கு கொண்டு சென்று முழுமையாக பரிசோதிக்க வேண்டும். மேலும், பலியான காளிதாசின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோடு, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,’’ என்றார்.