தமிழகத்திற்கு மேலும் 1.50 லட்சம் RT-PCR சோதனை கருவிகள் வருகை: கொரோனா பரிசோதனையை விரைவுபடுத்த அரசு திட்டம்...!

சென்னை: தமிழகத்திற்கு மேலும் 1.50 லட்சம் RT-PCR சோதனை கருவிகள் வந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க வருகிற மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காகவும், இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாநில அரசுகளும் தங்களுக்கு ஏற்றார்போல் செயல்படுத்தி  வருகின்றனர். இருந்தாலும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்வதில் தாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக RT-PCR கருவிகள் மூலம் தொடர் சோதனையை மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை, 2 லட்சத்து 16 ஆயிரத்து 416 மாதிரிகள்   சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதல் சோதனை கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டது. முதலில் ஒரு லட்சம் RT-PCR சோதனைக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள், தமிழகம் வந்து சேர்ந்த நிலையில், அனைத்து  மாவட்ட மருத்துவமனைகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 10 லட்சம் RT-PCR சோதனைக் கருவிகளுக்கு தென்கொரியாவிடம் முன்பதிவு செய்துள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தென்கொரிய நிறுவனத்திடமிருந்து மேலும், 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்ததுள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில்  உள்ளது. எனவே, பெற்ற பிசிஆர் கருவிகள் மூலம் சோதனையை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: