நாகர்கோவில் : திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சென்னை வியாபாரிக்கு, குமரி மருத்துவக்கல்லூரியில் நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை மணலி பகுதியை சேர்ந்த 63 வயது நிரம்பிய மளிகை கடை வியாபாரி ஒருவர், தனது மகனின் திருமணத்துக்காக நெல்லை மாவட்டம் கூடங்குளத்துக்கு நெருங்கிய உறவினர்களுடன் வந்து இருந்தார். மணமகளின் இல்லத்தில் வைத்து நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் திடீரென வியாபாரி மயங்கி விழுந்தார். அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து கூடங்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று வியாபாரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு கொரோனா பரிசோதனையும் நடந்தது.