ரம்ஜான் பண்டிகை நாளில் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி 2 மணி நேரம் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த  அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவாரூரை சேர்ந்த குத்புதீன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘வரும் 25ம் தேதி ரம்ஜான் திருநாள் வருகிறது.  இந்த நன்நாளில் பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுவது மிக முக்கியமான சடங்காகும். ஊரடங்கு உத்தரவு வரும் 31ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால்  ரம்ஜான் நாளன்று பள்ளிவாசல்களில் 2 மணிநேரம் உரிய விதிமுறைகளைக் கடைபிடித்து தொழுவதற்கு  அனுமதி வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆஜராகி, ஊரடங்கு நேரத்தில் மத வழிபாடுகளுக்கு அனுமதி வழங்க முடியாது என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: